India

'நேற்று தூய்மை பணியாளர் - இன்று பஞ்சாயத்து தலைவி' : கேரள உள்ளாட்சித் தேர்தலில் சாதித்த பெண்!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பத்தனபுரம். இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தவள்ளி (வயது 46).

அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனந்தவள்ளி போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பட்டியலின பெண்ணான ஆனந்தவள்ளி கடந்த 10 ஆண்டுகளாக அதே பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக வேலைசெய்துள்ளார். இந்த வெற்றி குறித்து ஆனந்தவள்ளி கூறுகையில் , “எனது கட்சியால் மட்டுமே இதுபோன்ற செயல்களை செய்ய முடியும். இதற்கு நான் கடன் பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய ஆனந்தவள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ன ஆதரவு குடும்பத்தை சேர்ந்தவர். இவரது கணவர் பெயிண்டராக உள்ளார். 2011ஆம் ஆண்டு முதல் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதி நேர தூய்மை பணியாளராக பணி செய்து மாதம் 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இப்போது 6 ஆயிரம் ரூபாய் பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு புரட்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன. 21 வயது ஆர்யா ராஜேந்திரன் என்ற மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளது தேசிய அளவில் பாராட்டுகளை பெற்றது.

Also Read: “ஓயாத சாதி ஆதிக்க கொடுமை: அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்கும் துணை தலைவர்”- தலித் பஞ்சாயத்து தலைவி புகார்!

இதைப்போன்று 22 வயதான சட்டக் கல்லூரி மாணவி, சாருதி, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒலவண்ண பஞ்சாயத்துத் தலைவராகவும், 21 வயதான ரேஷ்மா மரியம் ஜாய், பத்தனம்திட்டாவில் உள்ள அருவபூலம் பஞ்சாயத்தின் தலைவராகவும், ராதிகா மகாதேவன் (23) பாலக்காட்டில் உள்ள மலம்புழா பஞ்சாயத்தின் தலைவராகவும், வயநாடு மாவட்டத்தில் போஜுதான பஞ்சாயத்துத் தலைவராக 23 வயதான அனஸ் ஸ்டெபியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவையாவும் கேரளாவில் நடந்தாலும் தமிழகத்தில் நிலை தலைகீழாக உள்ளது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து தரையில் அமர வைப்பதாக விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் முத்துலட்சுமி என்பவர் போலிஸில் புகார் அளித்துள்ளார்.

இது முதல்முறையல்ல, தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இக்கொடுமையை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 21 வயதில் திருவனந்தபுரம் மேயர் - பதவியேற்றார் ஆர்யா ராஜேந்திரன் !