India

விவசாயிகளை கண்டுகொள்ளாமல் போரிஸ் வருகையை எதிர்நோக்கும் மோடி அரசு... மக்கள் நலம் பேணும் லட்சணம் இதுதானா?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் அந்நாட்டுடனான அனைத்து வகையான போக்குவரத்துகளுக்கும் தற்காலிகமாக இந்தியா தடை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பிரிட்டனில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இந்தியாவுக்கு வந்த பயணிகளையும் கண்டறிந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளது சுகாதாரத்துறை.

இந்நிலையில், ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை போரிஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தா கூறியுள்ளார்.

மேலும், போரிஸ் ஜான்சனை வரவேற்க ஆவலாக இருப்பதாகவும் ஸ்ரீவஸ்தா தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை இந்தியாவுக்கு அழைத்து பெரும் திரளான கூட்டத்தை நடத்தியது மோடி அரசு.

இது கொரோனா பரவலுக்கு வித்திட்டதாக இன்றளவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், பிரிட்டனில் புதிய ரக கொரோனா கடுமையாக பரவி வரும் வேளையில் போரிஸ் ஜான்சனை வரவேற்பதில் ஆவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாவதற்கான சாத்தியக் கூறுகளை மோடி அரசு ஏற்படுத்திவிடுமோ என சமூக ஆர்வலர்கள் ஐயம் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், நாட்டின் தலைநகரில் வாழ்வாதாரம் பறிபோய்விடக் கூடாது என எண்ணி புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் 30வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக மோடி அரசு செயல்படுகிறது எனவும் அரசியல் நோக்கர்கள் சாடியுள்ளனர்.

Also Read: பொருளாதார வீழ்ச்சி: மோடி ஆட்சியில் ஏற்றுமதியுமில்லை; இறக்குமதியுமில்லை - வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!