India
'இந்தியாவின் 10 முன்னணி நிறுவனங்களின் தேனில் கலப்படம்' - சர்க்கரைப் பாகு கலந்திருப்பது சோதனையில் அம்பலம்!
நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேனில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பல தூய்மை சோதனைகள் உள்ளன. அவ்வகையில், சமீபத்தில் சில பிரபலமான நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் தேன், தூய்மைக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய இந்த சோதனையில், பல நிறுவனங்களின் தேனில் செயற்கை சர்க்கரை பாகை கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.
மருத்துவத்தில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. தேன் பொதுவாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய ஒரு உணவுப்பொருள். தற்போது தொற்றுநோய் பரவி வரும் நிலையில் தொற்றுநோயை எதிர்த்து போராடும் குணம் தேனுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், அதனுடன் சர்க்கரை சேர்ந்தால் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்நிலையில், மூலக்கூறு மட்டத்தில் ஒரு பொருளின் கலவையை அறிவதற்கான இந்த சோதனை (என்.எம்.ஆர் சோதனை) ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டுள்ளது. தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இந்த சோதனை தேவைப்படுகிறது.
அந்தவகையில் டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு உள்ளிட்ட 13 முன்னணி பிராண்டுகளின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேன் என்.எம்.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் பதஞ்சலி, டாபர், ஜண்டு, அபிஸ் ஹிமாலயா, ஹை ஹனி உள்ளிட்ட 10 நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவற்றில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை பாகுகள் கலந்திருப்பதாக சி.எஸ்.இயின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சு குழுவின் திட்ட இயக்குனர் அமித் குரானா தெரிவித்தார்.
சபோலா, மார்க்பெட் சோனா, சொசைட்டி நேச்சுரல் ஆகிய 3 நிறுவனங்களின் தேன் கலப்படமற்ற தேன் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அசல் தேன், சுத்தமான தேன் எனக் கூறி அதிக விலையுடன் விற்பனை செய்யும் நிறுவனங்களின் தேனில் கலப்படம் என்ற தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சி.எஸ்.இ கூறிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!