India

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உச்சநீதிமன்றம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

பல்வேறு கட்ட போராட்டங்கள், அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட சம்பவங்களையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிக அனுமதி அளிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாசு விதிகளை மீறி செயல்பட்டதால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பராமரிப்பு பணிகளுக்காக இடைக்காலமாக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நிராகரித்த , உச்சநீதிமன்றம் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்துள்ளது.

Also Read: 50% இடஒதுக்கீடு அரசாணை வழக்கு : தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!