India

“விவசாயிகளை மதிக்காத மோடி அரசு”: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கனடா பிரதமருக்கும் கண்டனம்!

மோடி அரசின் வேளாண் விரோத கொள்கைகளை எதிர்த்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மத்திய அரசின் முதல் நாள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், ஏழாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே, மாநிலங்கள் தோறும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் 551-வது பிறந்த நாள் கனடாவில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். மேலும் அவர், “இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் கவலையளிக்கிறது; விவசாயிகளின் உரிமைக்கான போராட்டத்திற்கு கனடா எப்போதும் துணை நிற்கும்!” எனத் தெரிவித்திருந்தார்.

கனடா பிரதமரின் இந்த ஆதரவு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறின. அதேவேளையில், மோடி அரசின் விவசாய போக்கு, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைக்குனியச் செய்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-க்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து, முழுமையான தகவல்களை அறியாமல் கருத்துக்கள் தெரிவிப்பதை பார்க்கிறோம். எனவே, உள்நாட்டு விவகாரத்தில் இதுபோன்ற கருத்துக்கள் தேவையற்றது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 7வது நாளாக ஸ்தம்பிக்கும் டெல்லி: போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் தீவிரமடையும் போராட்டம் !