India

“மோடி ஆட்சியில் தொடரும் திண்டாட்டங்கள்” : வேலையின்மை விகிதம் 7.8% ஆக அதிகரிப்பு - CMIE அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், ஊரடங்கு தொடர்வது காரணமாக மக்கள் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது. மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 31ம் தேதி தரவுகளின்படி, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017- 2018-ம் ஆண்டில் மட்டும் 6.1 சதவீதம் வேலையின்மை அதிகரித்துள்ளது.

ஆண்களில் 6.2 சதவீதமும், பெண்களில் 5.7 சதவீதமானோரும் வேலையின்றி தவித்து வருவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், நவம்பர் 22. தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம்7.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy - CMIE) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரடங்கிற்குப் பிறகு கடந்த 4 வாரங்களாகவே தொழிலாளர் சந்தை சற்று தடுமாற்றத்தில் இருந்து வருகிறது.

எனினும், பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் துவங்கிய கடந்த ஜூன் மாதத்திற்குப் பின், நவம்பர் 22 தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் வேலையின்மையும், வேலைவாய்ப்பு விகிதமும் மீண்டும் பின்னோக்கித் திரும்பியுள்ளது.

குறிப்பாக, நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 5.5 சதவிகிதமாகவும், இரண்டாவது வாரத்தில் 7.2 சதவிகிதமாகவும் வேலையின்மை விகிதம் இருந்தது. அது தற்போது 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மறுபுறத்தில் வேலைவாய்ப்பு விகிதமும் 36.24 சதவிகிதமாக குறைந்துள்ளது.

மேலும், தற்போது மூன்றாவது வாரத்தில் 36.24 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதன்மூலம் கொரோனா பொது முடக்கத்திற்கு முந்தைய நிலையை வேலைவாய்ப்பு எட்டவில்லை. அதற்கு செல்வதற்கு முன்பே மீண்டும் குறையத் துவங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையின்மை ஒருபக்கம் அதிகரிக்கும் அதேவேளையில், பசியும், வேலையில்லாத மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 2019ம் ஆண்டில் மட்டும் வேலையின்மை பிரச்னையால் 2,851 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Also Read: “45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 3 ஆண்டுகளில் படுமோசம்” : பா.ஜ.க ஆட்சியில் வேலையின்மை அதிகரிப்பு!