India

“தடைகளை கடந்து டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்” : மோடி அரசைக் கண்டித்து 3வது நாளாக விவசாயிகள் போராட்டம்!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இரண்டுநாள் நாடாளுமன்றம் முற்றுகைப் போராட்டத்தை நடத்த முறையாக விவசாயிகள் அனுமதி கோரியும் அது வழங்கப்படவில்லை. மத்தியப் படையைக் குவித்து, டெல்லி எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் விவசாயிகளை கலைக்க முயற்சித்தனர்.

அடக்குமுறைகளை, மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு விவசாயிகள் முன்னேறினர். இதன் பின்னர், பணிந்த டெல்லி போலிஸ் தற்போது அவர்களை வடக்கு டெல்லி புராரி பகுதியில், உள்ள நிரங்காரி மைதானத்தில் போராட்டத்தை தொடர அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், வரும் டிசம்பர் 3ஆம் தேதி மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகள் தங்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன் போராட்டம் நடத்துவதாகக் கூறியுள்ளனர்.

எனவே, சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால் இந்த போராட்டம் காலவரையறையற்ற போராட்டமாக மாறும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

டெல்லி போராட்டத்தில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகளும் கலந்துகொள்ளப் போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் இந்தப் போராட்டம் மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: டெல்லி செல்லும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் தாக்குதல் !