India

மருத்துவ சிறப்பு உயர் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு அரசாணை வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டதால் இந்த ஆண்டே 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர்.

இட ஒதுக்கீடு வழங்க நவம்பர் 7 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டே இட இதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது மத்திய அரசும் 50% இடஒதுக்கீட்டை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் 50% இடஒதுக்கீடு வழங்கிய அரசாணையை எதித்து தொடரப்பட்ட மனுவும் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Also Read: பாலியல் குற்றவழக்குகளை நீதிமன்றங்கள் எப்படி கையாள வேண்டும் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!