India

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 83.13 லட்சமாக உயர்வு - நேற்று ஒரே நாளில் 46,254 பேர் பாதிப்பு ! #COVID19

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 46,254 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83,13,877 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 514 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,23,611 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 53,357 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 76,56,478 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 5,33,787 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 92.09% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.49% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 6.42% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 12,09,609 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 11,29,98,959 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

Also Read: இந்தியாவில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை!