India

“நடுத்தெருவில் நிற்கும் ஜனநாயகம்; அச்சுறுத்தப்படும் எதிர்க்கட்சிகள்” - சோனியா காந்தி குற்றச்சாட்டு!

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கருத்து அறிக்கை அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திய ஜனநாயகம் நடுத்தெருவுக்கு வந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித் தளத்தில் பா.ஜ.க குறித்து எழுதியுள்ள சோனியா கூறுகையில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இப்போது நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. எதிர்ப்புகள் அனைத்தும் பயங்கரவாதம் அல்லது தேச விரோத செயல் என்ற பெயரில் ஒடுக்கப்பட்டு ஜனநாயகம் வெற்றிடமாக்கப்பட்டுள்ளது.

தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற போலியான அறிவிப்புகளின் மூலம் மக்களின் உண்மையான பிரச்னைகளின் மீதான மாநிலங்களின் கவனம் திசைதிருப்பப்படுகிறது. இந்திய பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ, என்.ஐ.ஏ மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு என அனைத்து அமைப்புகளும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன.

பா.ஜ.க எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தும் தேச துரோக குற்றங்களாக முத்திரை குத்தப்படுகின்றன. போராட்டங்களை தங்களது பிரிவினை அரசியலுக்கான ஆயுதமாக பா.ஜ.க பயன்படுத்துகிறது.

பிரதமர் மோடி, தனது பேச்சுகளில் 130 கோடி இந்திய மக்கள் என்று குறிப்பிடுகிறார். ஆனால், அவர் தலைமையிலான அரசு, அவர்களுக்கு வாக்களிக்காதவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறது” என விமர்சித்துள்ளார்.

Also Read: கொரோனா வார்டில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவர் ‘மர்ம’ மரணம் : பணிச்சுமை தாளாமல் தற்கொலையா?