India

“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ராஜேஷ் பூஷன் பேசுகையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 587 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய ஆறு மாநிலங்களில்தான் 64 சதவீதம் அளவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்கள் தான் கொரோனாவால் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “உலகில் கொரோனாவிலிருந்து மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்கள் குணமடைந்துள்ளது நமது நாட்டில்தான். நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள தேசிய சுகாதார அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

Also Read: தமிழகத்தில் இன்று 3,536 பேருக்கு கொரோனா தொற்று... சென்னையில் 885 பேர் பாதிப்பு! #Covid19