India

“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை!

இந்தியாவில் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், ஊரடங்கை அறிவிப்பதற்காக நாட்டு மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் மோடி.

இந்நிலையில், கொரோனா பரவலுக்குப் பிறகு இன்று ஏழாவது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டதால் மக்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகினர்.

இந்நிலையில் சற்று முன்பு பிரதமர் மோடி பேசியதாவது :

“ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலும் போய்விடவில்லை. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது.

ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் விழாக்காலம் நெருங்குவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விடக்கூடாது. விழாக்காலங்களில் நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்களை காக்கவேண்டும் என்ற அரசின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. உலகளவில் மற்ற நாடுகளைவிட கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது.

முகக் கவசம் அணியாமல் வெளியே செல்வது உங்களுக்கும் குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படுத்தும். நாம் பொறுப்பற்று இருந்தால் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இரவு பகல் பாராமல் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி வந்தால் அதை மக்களிடம் கொண்டு செல்வது எப்படி என்பது தொடர்பாக ஆலோசிக்கிறோம்.”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Also Read: “கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்!