India

மருத்துவப்படிப்பில் OBC இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க மத்திய அரசு மறுப்பு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத ஓ.பி.சி இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே (2020) அமல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, அக்.,16க்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த ஆண்டுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கமுடியாது என்று மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் நடப்பாண்டுக்கு ஏற்கனவே உள்ளது போன்று 27 சதவீதத்தையாவது வழங்கவேண்டும் என்று வாதிட்டனர்.

மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் இந்த ஆண்டு முன்பு இருந்தபடி 27 சதவீதத்தை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 50% வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இல்லை. ஆகவே அந்த குழுவானது முழுமையான குழுவாக இல்லை என்கிற வாதத்தையும் முன்வைத்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். எழுத்துப்பூர்வமான வாதங்களை மனுதாரர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: மத்திய அரசு நிபந்தனை விதிக்காதபோது தமிழக அரசு இ-பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன்? : சென்னை ஐகோர்ட் கேள்வி!