India

“வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்துக” - உச்சநீதிமன்றம் உத்தரவு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு கடன் தவணைகள் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களுக்கு எதிராக மத்திய அரசு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது.

அதில், ஊரடங்கு காலத்தில் இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களின் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது. இந்த குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் வட்டிக்கு வட்டி செலுத்தி இருந்தால் அதை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சில வங்கிகள் இந்த உத்தரவை அமல்படுத்த ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என கூறினர். அதற்கு நீதிபதிகள், தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால் எவ்வளவு விரைவாக செய்யமுடியுமோ அதற்குள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை, உங்களிடம் கொடுக்கப்பட்ட கூடுதல் பணத்தைதான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப் போகிறீர்கள், இதனால் உங்களுக்கு சிரமம் இருக்காது.

ரூ. 2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு மீதான விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Also Read: ராகவேந்திரா மண்டபத்துக்கு சொத்து வரி கட்டாத ரஜினிகாந்த்.. அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை!