India

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பாக, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் ஆகிய 3 பேர் ஆஜராகினர். இதனை பார்த்த தலைமை நீதிபதி எதற்கு இந்த வழக்கிற்காக இத்தனை பேர் ஆஜராகி இருக்கிறீர்கள்? என்று கேட்டு ஆச்சரியம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடங்கியபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பரமேஸ்வரா மற்றும் வில்சன் ஆகியோர் இந்த சட்டங்கள் என்பது மாநில அரசினுடைய சட்டங்களை செயலிழக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.

அரசியல் சாசன விதிமுறைகளுக்கு மாறாக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆகவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தங்களுடைய முதல்கட்ட வாதங்களை தொடங்கினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுவதாகக் கூறி 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.

மத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Also Read: வேளாண் மசோதா: விவசாயிகளின் பழிக்கு ஆளாகாமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக - மு.க.ஸ்டாலின் அறிவுரை!