India

ஒரே நாளில் 80,472 பேர் பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்தது: கொரோன தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது?

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,25,764 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 1,179 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 97,497 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள்.

மேலும், ஒரே நாளில் 86,428 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில், 51,87,826 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 9,40,441பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேன்மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 83.33% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.57% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 15.11% ஆக குறைந்துள்ளது.

Also Read: சென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு! #Covid19