India

பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கடுமையாகத் தாக்கப்பட்ட 19 வயது தலித் பெண் பலி : உ.பி-யில் தொடரும் கொடூரங்கள்!

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அங்கு 19 வயது தலித் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு வீசப்பட்ட நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளது நாட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான தலித் பெண் ஒருவர், வயலில் வேலை செய்தபோது நான்கு இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை அவர் வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக அவரது நாக்கை வெட்டியுள்ளனர். மேலும் அவரது முதுகு, கழுத்து உள்ளிட்ட இடங்களிலும் கொடூரமாக தாக்கி ரத்த வெள்ளத்தில் சாலையில் வீசிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடந்த நிலையில், அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் இன்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன்பு அந்தப் பெண் போலிஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, 4 இளைஞர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகி பலியான தலித் பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெண்களின் பாதுகாப்புக்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேசம்தான் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

Also Read: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து உ.பி. அலிகாரில் பட்டப்பகலில் நூதன கொள்ளை : வைரல் வீடியோ!