India

பஞ்சாப் விவசாயிகள் 2வது நாளாக ரயில் மறியல் - நாடு முழுவதும் வேளான் மசோதாவை எதிர்த்து வழுக்கும் போராட்டம்!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதனையடுத்து #ScrapAntiFarmersAct என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. விவசாயச் சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) வேளாண் மசோதாக்களுக்கு எதிராகச் செப்டம்பர் 24ம் தேதி முதல் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தது.

இதனையடுத்து நேற்று ரயில் மறியல் போராட்டத்தைத் தொடங்கினர். அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் நடத்திய விவசாயிகள் இரவில் தண்டவாளத்திலேயே தூங்கி மீண்டும் இன்று காலை போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராடும் விவசாயிகள் தண்டவாளத்தில் நடுவில் மேடை அமைத்து விவசாயச் சங்கத் தலைவர்கள் அதில் அமர்ந்து, இந்த விவசாய மசோதாவை எதிர்த்து குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த போராட்டம் இரண்டாவது நாளாக நீடிப்பதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து அக்டோபர் 1ம் தேதி முதல் காலவரையற்ற ரயில் மறியல் போராட்டத்தைத் தொடர உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.