India

விவசாயிகளை வதைக்கும் பா.ஜ.க அரசின் மசோதாக்கள் : எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராஜினாமா!

மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகார பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 அவசர சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க அரசின் அவசர சட்டங்கள் காரணமாக விளைபொருட்களை விலை குறைவாக விவசாயிகள் விற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளம் கட்சி, விவசாயிகளின் பிரச்னைகளுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு காணாமல் அவசர சட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க துடிப்பதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில், மோடி அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அளித்துள்ளார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் இன்றைய விவாதத்தின்போது பேசிய ஹர்சிம்ரத் கவுர் பாதல், “கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாபில் விவசாயத்துறை வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டங்களை இந்த மசோதாக்கள் மூலம் மத்திய அரசு களங்கப்படுத்தி விட்டது” எனக் கடுமையாகக் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Also Read: தென்மாநிலத்தவர்; சிறுபான்மையினர் புறக்கணிப்பு - ஆரிய கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் பா.ஜ.க அரசு!?