India

பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்ற தீர்ப்பு மோசமான முன்னுதாரணம் - வெடிக்கும் சர்ச்சை!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறித்து பிரபல மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட்களை பதிவிட்டதன் பேரில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து பிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் ஜூலை 22ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. தனது தரப்பு பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருந்தார் பிரசாந்த் பூஷன். அதில் நீதித்துறையை களங்கப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே நிறுத்தி வைக்கப்பட்ட பைக் மீதுதான் அமர்ந்திருந்தார் என்பதை தா ன் கவனிக்காமல் தவறுதலாக ட்வீட் செய்துவிட்டதாகவும், தான் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது எனவும் பதில் அளித்திருந்தார்.

பிரஷாந்த் பூஷனின் பதில்களில் திருப்தியடையாத உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று இன்று அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி செய்தது தவறா என விசாரிக்காமல், அதைச் சுட்டிக்காட்டியவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

வரும் காலங்களில் அதிகாரத்தின் உயர்ந்த நிலைகளில் இருப்பவர்கள் செய்த ஊழல் உள்ளிட்ட தவறுகள் குறித்து எந்தப் பத்திரிகையோ, தனிநபரோ வெளிக்கொண்டு வந்தால், உலக அரங்கில் இந்திய நாட்டிற்கு அவமானம் ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில், ஊழலை வெளிப்படுத்தியவர் தண்டிக்கப்படலாம் எனவும் இந்த தீர்ப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: “அதீத வரி, அரசு இழைக்கும் சமூக அநீதி” : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே பேச்சு!