India

EIA2020 வரைவு அறிக்கையின் தமிழ் வடிவம் தயார்தான்; ஆனால் வெளியிட அவகாசம் வேண்டும் - மழுப்பும் மத்திய அரசு!

ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, பிராந்திய மொழிகளில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், அதுவரை வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க கோரியும் மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிட முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தயாராக உள்ளது எனவும், இதுசம்பந்தமாக எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

மேலும், இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து, எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு என வாட்ஸ் ஆப்-பில் செய்தி பரவுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அது அதிகாரப்பூர்வமானதா எனவும் விளக்கமளிக்க கூறினர்.

Also Read: EIA 2020 அறிக்கையை தமிழில் மொழிப்பெயர்க்க மறுப்பதா? உச்ச நீதிமன்ற ஆணையை உதாசீனப்படுத்தும் பா.ஜ.க அரசு!