India

சென்னை விமான நிலையத்திலிருந்து விரைவில் சர்வதேச விமான சேவை தொடக்கம்? - விமான போக்குவரத்துத்துறை பரிசீலனை!

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் ஊரடங்கு தடை நீக்கப்பட்டபின் அடுத்த மாதம் முதல் இயங்கத் தொடங்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்திலிருந்து சர்வதேச விமானங்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் அடுத்த மாதத்திலிருந்து அருகில் உள்ள நாடுகளுக்கு மட்டும் விமான சேவையைத் தொடங்கலாமா என்று விமான போக்குவரத்துத்துறை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

மீண்டும் சர்வதேச விமானங்கள் இயங்கத்தொடங்கும் விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் பரீசிலிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இது குறித்துப் பேசியுள்ள விமானநிலைய அதிகாரி ஒருவர் “இதுவரை உள்நாட்டு விமானச் சேவை பயன்பாடு லாக்டவுனுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததைப் போல் உயரும் வரை சர்வதேச விமான சேவையைத் தொடங்கவேண்டாம் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் விமான பயன்பாடு அதிகரிக்கவில்லை. மக்கள் முக்கியமான தவிர்க்கமுடியாத விஷயங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.

தற்போது மத்திய சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இயக்க வழிமுறைகள் இந்த விமான சேவை தொடக்கத்தை மனதில் வைத்தே கொடுக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த புதிய வழிமுறைகளின்படி ஒருவர் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருகிறார் என்றால் அவர் கோவிட் 19 நோய்த் தொற்று இல்லை என்ற சான்றிதழைக் காட்டவேண்டும். அப்படிக் காட்டினார் என்றால் அவரை அரசாங்கங்கள் தனிமைப்படுத்தத் தேவையில்லை. அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த வழிமுறையை மாநில அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

சில முக்கிய இடங்களான லண்டன், அபுதாபி உள்ளிட்ட இடங்களுக்கு சென்னையிலிருந்து விமான சேவை முதலில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “தமிழக மாணவர்களின் உடல் தனி விமானம் மூலம் கொண்டுவரப்படும்” : டி.ஆர்.பாலுவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!