India

“விசாரணைக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு”: தமிழகத்தில் அடுத்த லாக்கப் மரணம்? - தி.மு.க எம்.எல்.ஏ போராட்டம்!

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த வாகைகுளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (76). இவர் வீட்டின் பின்பகுதியில் சுமார் 2½ ஏக்கரில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்துவருகிறார். இரவு நேரங்களில் தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் வருவதால் தோட்டத்தைச் சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடையம் வனச் சரக அதிகாரிக்கு புகார் வந்த நிலையில் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு கடையம் வனச்சரக அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில் நேற்றைய தினம் மாலையில் கடையத்தில் உள்ள வன அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்ததோடு மின்வேலி அமைத்தது தவறு எனவும் தானே ஒப்புக்கொண்டு அதற்கான அபராதத்தையும் செலுத்துவதாகத் தெரிவித்ததாகக் தெரிகிறது.

இந்நிலையில், உடல்நிலையில் ஏதோ மாற்றம் இருப்பதாகவும் நெஞ்சுவலிப்பதாகவும் வனத்துறை அதிகாரிகளிடம் அணைக்கரை முத்து தெரிவித்ததாகவும், உடனடியாக வனத்துறை ஜீப் மூலம் கடையம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அணைக்கரை முத்து உயிரிழந்ததாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடல் உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரை தாக்கியதில் தான் அவர் உயிரிழந்தாக உறவினர்கள் குற்றச்சாட்டி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், உரிய விசாரணை மேற்கொள்ளக் கோரியும் உறவினர்களுடன் ஆலங்குளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை உள்ளிட்டோரும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.