India

1.47 லட்சம் கோடியை சுருட்டிய 2,426 நிறுவனங்கள்: வெளி நாட்டுக்கு தப்ப வைப்பதுதான் தண்டனையா? -ராகுல் ட்வீட்

நாட்டில் உள்ள 17 அரசு வங்கிகளில் இருந்து 2,426 நிறுவனங்கள் பெற்ற ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 350 கோடி ரூபாய்க்கு கடன்கள் இதுகாறும் செலுத்தப்படாமலேயே உள்ளது என அனைத்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில், SBIல் இருந்து 685 நிறுவனங்கள் 43 ஆயிரத்து 887 கோடிக்கும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியிலில் இருந்து 325 நிறுவனங்கள் 22 ஆயிரத்து 370 கோடிக்கும், பரோடா வங்கியில் இருந்து 355 நிறுவனங்கள் 14 ஆயிரத்து 661 கோடி என 17 வங்கிகளில் இருந்து நிறுவனங்கள் வாங்கிய கடன் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் 2019ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் பெறப்பட்ட கடன் விவரங்கள். இவ்வாறு அரசு வங்கிகளின் வாராக்கடன் 1.47 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், மக்களுக்கான இயங்கும் அரசு வங்கிகளில் இருந்து ரூ.1.47 லட்சம் கோடியை 2,426 நிறுவனங்கள் கொள்ளையடித்துள்ளன.

இந்த கொள்ளை தொடர்பாக மோடி அரசு விசாரணை நடத்தி கொள்ளையர்களை தண்டிக்குமா அல்லது நீரவ் மோடி, லலித் மோடி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை கடனில் இருந்து காப்பாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தது போன்று இவர்களையும் காப்பாற்றுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “சோதனையை குறைத்து, இறப்பை மறைத்து பொய்களையே நிறுவனமயமாக்கியுள்ளது பாஜக அரசு” - ராகுல் காந்தி கடும் சாடல்!