India

கொரோனா துயரம் : மின் கட்டணத் தொகையில் 50% மானியம் அறிவித்த கேரள அரசு - திருந்துமா தமிழக அரசு ?

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருமோ என்ற பயம் மக்களிடையே நிலவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் மின்சாரக் கணக்குகள் எடுக்க முடியாத காரணத்தால் சில வழிமுறைகள் மூலமாக அனைவரிடமும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

குறிப்பாக மின்துறை கடந்த 2 மாதங்களாக வீடுகளுக்கான மின் உபயோக கணக்கீட்டிற்காக ரீடிங் எடுக்க வரும் கணக்காளர்கள் அதற்கான அட்டையில் பயனீட்டு யூனிட் மற்றும் தொகையைக் குறிப்பிடுவதில்லை. மாறாக குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டண வசூல் மையத்தில் சென்று மின் கட்டணத்தைச் செலுத்தச் சொல்லுகிறார்கள்.

அதன்படி மின்கட்டண வசூல் மையம் சென்றால் அதிர்ச்சியடையும் வகையில் மிரட்டுகிறார்கள். உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் மின் கட்டணம் ரூ.390, மார்ச் மாதம் ரூ.420 மின் கட்டணம் செலுத்திய நிலையில் இந்த மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.5,200 செலுத்த வேண்டும் என அதிர்ச்சியூட்டும் தொகையை கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாது ஏழை விவசாயி குடும்பத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் மின் கட்டணம் வந்துள்ளது தமிழக மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், மின் கட்டணம் மூலம் மக்களிடம் கொள்ளை அடிக்கும் வேளையில் அ.தி.மு.க அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கேரள அரசு மக்களின் துயரங்களை போக்க மின் கட்டணம் செலுத்துவதில் சலுகைகள் வழங்கியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வெளியான அறிவிப்பில், கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க கேரள மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி 70 சதவீதம் மின் கட்டணத்தை செலுத்தினால் போதும் கேரள அரசு கூறியுள்ளது. தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கேரளாவிலும் இதேநிலை நீடிப்பதால், மக்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் அளிக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதற்காக கேரள மாநில மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிப்பில், “மானியத்தை கணக்கிட புதிய மென்பொருள் உருவாக்கப்படும் வரை பயனீட்டாளர்கள் 70 சதவீதம் கட்டணத்தை செலுத்தினால் போதும்” எனத் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது சில சலுகைகளையும் கேரள அரசு அளித்துள்ளது. அவை, “ஏப்ரல் 19 முதல் ஜூன் 19 தேதி வரையிலான காலகட்டத்திற்கே மின் கட்டண மானியம் பொருந்தும். மேலும், 50% வரை மானியம் மற்றும் மின் சேவை துண்டிக்கப்பட மாட்டாது. வீட்டுவேலை செய்வோர் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக மின் கட்டணத்தை 5 தவணைகளில் செலுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று, ஊரடங்கு என மக்கள் வருமானம் இன்றி தவித்து வரும் சூழலில் மின் கட்டணம் பெரும் பிரச்சனையாக மாறியது. மக்களின் பிரச்சனையை உணர்ந்து கேரளாவில் 70 சதவீதம் மின்கட்டணத்தை செலுத்தினால் போதும் என கேரள அரசின் மின்வாரியம் சலுகை அறிவித்திருப்பது மக்களிடையே பேரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசு கேரளாவைப் போன்று சலுகை அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “எக்குத்தப்பாக எறிய மின் கட்டணம் - கோல்மால் செய்யும் மின் வாரியம்” : மதுரை மக்கள் அதிர்ச்சி!