India

“அடுத்த ஓராண்டுக்கு இதுதான் நிலைமை” - கேரள அரசு அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகள்! #Corona

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை ஓராண்டுக்கு கடைப்பிடிக்குமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என கண்டறிய முடியவில்லை. இதனால், பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொது இடங்களிலும், பணியாற்றும் இடங்களிலும் முகக் கவசங்களை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்வுகளில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்கவும், இறுதிச் சடங்குகளில் 20 பேர் வரை பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவற்றை அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி நடத்த அனுமதி கிடையாது. அனுமதியளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு அதிகமாகக் கூடக் கூடாது.

வணிக வளாகங்களில் 6 அடி தனி மனித இடைவெளியை கணக்கில் கொண்டு அதிகப்பட்சமாக 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பொது இடங்கள், நடைபாதைகள், மற்றும் சாலைகளில் எச்சில் துப்புவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்திற்குள் பயணிப்பதற்கு இ-பாஸ் தேவையில்லை. ஆனால், பயணிகள் ஜக்ரதா தளத்தில் பயண விவரங்களை பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: “மதுரையில் ஜூலை 12 வரை முழு ஊரடங்கு... சென்னையில் ஊரடங்கு தளர்வுகள்” - தமிழக அரசு அறிவிப்பு!