India

மோடியை விமர்சித்தற்காக தேச துரோக வழக்கா?” : பத்திரிகையாளர் வினோத் துவாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!

டெல்லியில் பணியாற்றும் வினோத் துவா பத்மஸ்ரீ விருதுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆவர். அவர் சமீபத்தில் டெல்லி வன்முறை நடைபெற்ற போது பா.ஜ.கவினர் பேசிய கருத்துக்கள் தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். வினோத் துபாவின் அந்த கருத்துக்களுக்கு எதிராக டெல்லி போலிஸார் பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் வினோத் துவா மீது, பா.ஜக செய்தி தொடர்பாளர் அஜய் ஷ்யாம், சிம்லா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இமாச்சல பிரதேச அரசு அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்தது.

அதுமட்டுமல்ல இன்று சிம்லா வந்து விசாரணைக்கு ஆஜராகும் படி நேற்று சம்மன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினோத் துபா நேற்று தாக்கல் செய்த வழக்கை விடுமுறை தினமான இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.

பத்திரிகையாளர் வினோத் துபாக்காக ஆஜரான வழக்கறிஞர்,கருத்து சுதந்திரம் எனும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டார். இப்படி ஒவ்வொன்றும் வழக்கு தொடர்ந்தால் அரசுக்கு ஆதரவான இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே இயங்க முடியும் என குற்றம் சாட்டினார்.

இமாச்சல பிரதேச அரசுக்கு ஆஜரான மத்திய அரசின் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பினால் பதிலளிப்பதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசும், மாநில அரசும் இரண்டு வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வினோத் துவாவைக் கைது செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 24 மணி நேரத்துக்கு முன்பாக நோட்டீஸ் வழங்கி வீட்டில் வைத்துக் மட்டும் விசாரணை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.