India

“3 மாத கடன் தவணை அவகாசத்துக்கும் சேர்த்து வட்டி பெறுவதா?” - ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில் வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணையை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால், இந்த சலுகை காலத்திலும் வட்டி விதித்து வருகின்றன கடன் வழங்கும் வங்கிகள்.

இந்நிலையில் சலுகை காலத்தில் கடன் தவணைக்கான வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கடன் தவணை விவகாரத்தில், 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வட்டி, பின்னர் செலுத்தவேண்டிய கட்டணத்தில் சேர்க்கப்படுமா அல்லது வட்டிக்கு வட்டி கணக்கிடப்படுமா? என நாங்கள் கவலைப்படுகிறோம்.

ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி விதிப்பது கவலை அளிக்கிறது. வட்டிக்கு வட்டி போடுவது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தாதா?” எனக் கேள்வி எழுப்பினர்.

வங்கிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடன் தவணை காலத்தில் செலுத்தவேண்டிய தொகைக்கு வட்டி விதிப்பது தவிர்க்க முடியாதது எனக் கூறினார். இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும், நிதியமைச்சக அதிகாரிகளுக்கும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும்படி சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நீதிபதி அசோக் பூஷன் கேட்டுக்கொண்டார்.

மேலும், 3 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைக்கு வங்கிகள் வட்டி வசூலிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து 3 நாட்களுக்குள் முடிவெடுத்து பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூன் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “இடஒதுக்கீடு அடிப்படை உரிமையே! உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து சட்டவிரோதமானது” - கி.வீரமணி கண்டனம்!