India

“இடஒதுக்கீடு அடிப்படை உரிமை கிடையாது” : நீதித்துறை யார் பக்கம் பேசுகிறது? - பொதுமக்கள் ஆவேசம்!

முதுநிலை மருத்துவப்படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வு உள்ளது. நீட் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை. இதுவரை பல ஆயிரம் இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர். இந்தநிலையில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை. மருத்துவ படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.

குறிப்பாக இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஒரே காரணத்திற்காக அனைத்து தமிழக கட்சிகளும் ஒன்றிணைந்தது வர வேற்கத்தக்கது. இருப்பினும், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையின்கீழ் வராது எனக்கூறி மனுவை திரும்பப் பெறுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நாட்டுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அரசுக்கு சாதமாக இருப்பதாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: “தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பாதிப்பு அதிகரிக்கும்” : ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!