India

“கோவிலுக்குள் நுழைந்த தலித் சிறுவன் படுகொலை” : பா.ஜ.க ஆளும் உ.பியில் சாதிவெறியர்கள் அராஜகம்!

உத்தர பிரதேசத்தின் அம்ரோகா மாவட்டத்திலுள்ள டோம்கேரா கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் குமார் ஜாதவ். 17 வயது தலித் சிறுவனான இவர், சில நாட்களுக்கு முன்பு, தனது கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு வழிபடச் சென்றிருக்கிறார்.

அப்போது அவரை கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று சாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்திருக்கிறார்கள். எனினும் அவர்களின் தடையைத் தாண்டி, விகாஸ் குமார் கோவிலுக்குள் சென்று வழிபட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள், விகாஸ் குமார் கோயிலை விட்டு வெளியில் வந்தவுடன் அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

இதில் படுகாயமடைந்த விகாஸ் குமாரை அழைத்துக் கொண்டு, அவரது தந்தை ஓம் பிரகாஷ் ஜாதவ் காவல்துறையினரிடம் புகார் செய்தபோது, அவர்கள் புகாரை எடுத்துக் கொள்ள மறுத்துள்ளனர்.

இதனிடையே, விகாஸ் குமாரை கோயிலில் வைத்து தாக்கியது மட்டுமன்றி, கடந்த சனிக்கிழமையன்று அவரின் வீட்டிற்கே வந்த 4 பேர் கொண்ட கும்பல், விகாஸை இழுத்து வெளியில் போட்டு, துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதிவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. டோம்கேரா கிராமத்து சிவன் கோவிலுக்குள் நுழைந்த முதல் தலித், விகாஸ் குமார்தான். இதுவரையில் அந்தக் கோவிலுக்குள் பட்டியல் வகுப்பு சாதியினர் யாரும் நுழைந்ததில்லை. இதனிடையே அந்த வழக்கத்தை விகாஸ் குமார் உடைத்து நொறுக்கியதால், ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் விகாஸை படுகொலை செய்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர் - ஈரோட்டில் நடந்த சோக சம்பவம்!