India

“ஆன்லைன் வகுப்பு நடத்துவது தவறானது; இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு” - Dr.கஸ்தூரிரங்கன் அதிர்ச்சி தகவல்!

பள்ளிக் குழந்தைகளுக்கு இணையவழி வகுப்பு நடத்துவது சரியல்ல என்று புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதால், பள்ளிகளை குறித்த காலத்திற்குள் திறக்க முடியவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளி நிர்வாகத்தினர், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளன.

இணையவழிக் கற்றல் வகுப்புகள் வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றும், ஏழை எளிய வீட்டுக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரோ முன்னாள் தலைவரும் புதிய கல்விக் கொள்கை (2019) வரைவுக் குழுவின் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் கூறியிருப்பதாவது :

“மனிதர்களின் 86% மூளை வளர்ச்சி 8 வயதுக்குள் தான் நடக்கிறது. இந்த காலகட்டத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல் உள்ளிட்ட நேரடி தொடர்பின் மூலம் குழந்தைகளின் மூளையை முறைப்படி தூண்டாவிட்டால் அதன் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.

எனவே, உயர்கல்வி பயிலும் மாணவர்களைப் போல, பள்ளி மாணவர்களுக்கும் இணையவழி வகுப்புகள் நடத்துவது சரியல்ல. எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் இதுபோன்ற அணுகுமுறையை கையாளக்கூடாது. இந்த விவகாரத்தில் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

உடல் மற்றும் மன ரீதியாக பள்ளி மாணவர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள வேண்டியது அவசியம். இணையதள வகுப்புகள் மூலம் மாணவர்களிடம் உள்ள விளையாட்டு தன்மை, படைப்பாற்றல் உள்ளிட்ட திறமைகளை வெளிக்கொண்டுவர முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “முடிவுகளை எடுப்பதில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ஏன் இத்தனை குழப்பம்?” - தங்கம் தென்னரசு சாடல்!