India

“இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9,851 பேர் பாதிப்பு”: படுமோசமான நிலையில் இந்தியா!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 6,698,370 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 393,142 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த மூன்றரை மாதங்களில் பாதிப்பு 2,26,770 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 273 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து கடந்த 11 நாட்களாக உயிரிழப்பு நூற்றுக்கு மேல் பதிவாகிவருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 6,363ஆக அதிகரித்துள்ளது.

இதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் கடந்த 4 நாட்களில் இந்தியாவில் 25,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சுமார் 54 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பது சற்றே ஆறுதலாக இருந்தாலும் கடந்த மூன்ற நாட்களாகவே தொடர்ந்து ஆறாயிரத்துக்கு மேலானோர் பாதிப்பு தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2710 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 33,681 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 27,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,902 பேர் குணமடைந்துள்ளனர்.

Also Read: “3.93 லட்சத்தைக் கடந்த உயிர்பலி - 66 லட்சம் பேருக்கு பாதிப்பு” : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா!