India

“ஊரடங்கால் தொடர் சரிவை சந்தித்துவரும் பங்குச்சந்தை ” - அச்சத்தில் முதலீட்டாளர்கள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இது இன்னும் தீவிரமடையலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பாதிப்பு இந்திய பங்குச்சந்தையிலும் பெரிதாக எதிரொலித்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே அடி வாங்கி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர, ஓரிடத்தில் நின்றபாடில்லை.

அந்த வகையில், வெள்ளிக்கிழமையன்றும் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டுமே பலத்த அடி வாங்கியுள்ளன. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கிய பின்னர் காலை 11.55 மணி நிலவரப்படி சென்செக்ஸ் குறியீடு 258.75 புள்ளிகள் சரிந்து 33850.79ஆக குறைந்துள்ளது.

அதேபோல், தேசிய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை நிஃப்டி குறியீடு 73.60 புள்ளிகள் சரிந்து 9987.90 ஆக குறைந்துள்ளது. இந்த சரிவு வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 128 புள்ளிகள் குறைந்து 33,980 ஆகவும், நிஃப்டி 32 புள்ளிகள் குறைந்து 10,029 ஆகவும் முடிந்தது. பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்படும் சரிவு முதலீட்டாளர்களை அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

Also Read: ‘மிலிட்டரியை இறக்குவேன்’ என்ற ட்ரம்ப்... பதிலளிக்கத் திணறிய கனடா பிரதமர் ட்ரூடோ - சர்ச்சை வீடியோ!