India

“PM Cares நிதியிலிருந்து உயிரிழந்த தொழிலாளர்களுக்கு எவ்வளவு கொடுத்தீர்கள்?” - காங்கிரஸ் கேள்வி!

பி.எம் கேர்ஸ் நிதி மூலம் தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிவாரணம் அளித்தீர்கள் என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், “பிரதமர் மோடியிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம், பி.எம் கேர்ஸ் நிதியை உருவாக்கினீர்களே அதிலிருந்து கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது?

புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் நடந்து சென்றே இறந்துள்ளனர். சிலர் ரயில்களில் இறந்துள்ளனர். சில பசி, பட்டினியால் இறந்துள்ளனர். பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 12-ல், பேரிடர் காலங்களில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும், வாழ்வாதாரமிழந்தோருக்கும் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் இறந்தவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்ததா? இந்தச் சட்டத்தில் கணவனை இழந்த பெண்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் பிரிவு உள்ளது. இத்தகையோடுக்கு பா.ஜ.க அரசு என்ன கொடுத்தது, எவ்வளவு கொடுத்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

வரும் நாட்களில் நம் நாடு பொருளாதாரத்தில் மோசமான நிலைக்குச் செல்லவிருக்கிறது. இதை ரிசர்வ் வங்கியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நாட்டில் 45 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களது நிலை என்னவாகும்? நம் எதிர்காலம் என்னவாகும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “கொரோனா பரவ ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியே காரணம்” : மோடி அரசின் மீது சிவசேனா குற்றச்சாட்டு!