India

“தரமற்ற வென்ட்டிலேட்டர்களை வாங்கி உயிரோடு விளையாடுவதா?” - குஜராத் பா.ஜ.க அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத்தில் இதுவரை கொரோனாவால் 915 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவை அம்மாநில அரசு கையாள்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், வென்ட்டிலேட்டர் விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஜோதி சி.என்.சி என்ற நிறுவனம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வென்ட்டிலேட்டர் கருவிகளை தயாரித்தது. இந்நிறுவனம் 10 - 15 நாட்களில் 1,000 வென்டிலேட்டர்களை தயாரித்து அகமதாபாத் அரசு மருத்துமனைக்கு வழங்கியது.

ஜோதி சி.என்.சி என்ற நிறுவனம் தயாரித்து வழங்கிய வென்ட்டிலேட்டர்களை அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, சி.என்.சி நிறுவனம் தயாரித்த தமன் -1 வென்ட்டிலேட்டர் கருவிகள் உயிர்காக்க ஏதுவாக இல்லை என்று அகமதாபாத் பொது மருத்துவமனை மருத்துவர்கள் குஜராத் துணை முதல்வர் நிதின் படேலுக்கு கடிதம் எழுதினர்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சி, கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்வதில் குஜராத் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம்சாட்டியது.

முதல்வர் விஜய் ரூபானி தனது நண்பர்களின் நிறுவனங்களின் கருவிகளை விற்க உதவுவதாகவும், தரமற்ற வென்டிலேட்டர்களுக்கு ஒப்புதல் வழங்கி மக்களின் உயிர்களைப் பணையம் வைப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் பரேஷ் தனனி மற்றும் அமித் சாவ்டா ஆகியோர் குற்றம்சாட்டினர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடல் அகமதாபாத்தில் தெருவில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தரமற்ற வென்ட்டிலேட்டர்களை வாங்கிய விவகாரத்தில் அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Also Read: “மேலும் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதால் மட்டும் எவ்வித பலனும் இல்லை” - பா.ஜ.க அரசுக்கு கி.வீரமணி அறிவுரை!