India

“கடந்த 4 நாட்களில் 25,118 பேர் பாதிப்பு” : இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.31 லட்சமாக உயர்வு!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் முதலில் கண்டறியப்பட்டது.

ஊகானிலிருந்து திரும்பிய மாணவிக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மூலமாக பல மாநிலங்களிலும் படிப்படியாக கொரோனா பரவியது. மார்ச் 16 ஆம் தேதி நூறு பேருக்கும், மார்ச் 30 ஆம் தேதி ஆயிரம் பேருக்குமாக உயர்ந்தது.

தற்போத மூன்றரை மாதங்களில் பாதிப்பு 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 147 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து கடந்த 11 நாட்களாக உயிரிழப்பு நூற்றுக்கு மேல் பதிவாகிவருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 3867 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் கடந்த 4 நாட்களில் இந்தியாவில் 25,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சுமார் 54 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பது சற்றே ஆறுதலாக இருந்தாலும் கடந்த மூன்ற நாட்களாகவே தொடர்ந்து ஆறாயிரத்துக்கு மேலானோர் பாதிப்பு தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47,190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 15,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 103 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7,491பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 13,664 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 829 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6169 பேர் குணமடைந்துள்ளனர்.

Also Read: “எடப்பாடி அரசின் அலட்சியம்” : உணவின்றி இரண்டு நாட்களாக கேரள எல்லையில் காத்திருக்கும் தமிழக மக்கள்!