India

“தினக் கூலி வேலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள், ஐ.டி ஊழியர்கள்” - ஊரடங்கால் ஏற்பட்ட அவலநிலை!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால், மக்கள் நேரடி பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை கணிசமாக குறைத்துவிட்டன. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெலங்கானா மாநிலம் யாத்ரி புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி - பத்மா தம்பதி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படாததால் அவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் தங்கள் குழந்தைகளையும், பெற்றோரையும் காப்பாற்றுவதற்காக அவர்கள் இருவரும் அங்குள்ள கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாயக் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாய்க கூலி வேலை செய்யும் ஆசிரியர் சிரஞ்சீவி கூறும்போது, “சம்பளம் கிடைக்காததால் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமமாக இருந்தது. குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்காகவே விவசாயக் கூலிகளாக பணிபுரிகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களைப்போன்று ஏராளமான ஆசிரியர்களும், ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த ஐ.டி. ஊழியர்களும் ஊதியமிழந்து, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கின்றனர்.

கடந்த 8 ஆண்டுகளாக ஆசிரியராக பணிசெய்து வந்த ஜெயராம் என்பவர் 300 ரூபாய் தினக் கூலிக்கு பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் மணி என்பவர் ஏரி தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Also Read: “ஊரடங்கால் மீண்டும் அதிகரித்த விவசாயிகள் தற்கொலை” : கடந்த 60 நாட்களில் 109 விவசாயிகள் பரிதாப பலி!