India

“நான்காம் கட்ட ஊரடங்கு - இன்று மாலை வருகிறது அறிவிப்பு” : தளர்வுகளோடு அறிவிக்க மத்திய அரசு திட்டம்!

இந்தியாவில் பாதிப்பு 86 ஆயிரத்தை நெருங்கியது. இந்நிலையில், பிரதமர் மாநில முதல்வர்களுடன் கடந்த திங்கள் கிழமை நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து மாநில அரசுகள் நான்காம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை மத்திய அரசுக்கு நேற்று அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு நேற்று இரவு ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் புதிய விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இன்று இது குறித்து பிரதமருடன் இறுதி ஆலோசனை நடத்திய பின்னர் விதிமுறைகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா, தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே இம்மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்துள்ளன. பல மாநிலங்கள் சிவப்பு மண்டல பகுதியை மாவட்ட அளவில் முடிவு செய்யாமல் அந்தந்த பகுதிவாரியாக முடிவு செய்ய வேண்டும். அதனை மாநிலங்களே முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.

இந்த சிவப்பு மண்டலம் தவிற மற்ற இடங்களில் 50% இயல்பு நிலை தொடங்கும் நிலையில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அரசு, தனியார் அலுவலகங்கள் போதிய பாதுகாப்புடன் இயங்க அனுமதிக்கபப்படும்.

பொதுப் போக்குவரத்தை மாவட்ட அளவில் குறைந்த பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும். விமானப் போக்குவரத்து ஜூன் மாதம் மட்டுமே தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பெரிய வணிக மையங்கள் உள்ளிட்ட அதிக மக்கள் நடமாட்டம் உள்ள நிறுவனங்கள் அனைத்தையுமே மே 31 ஆம் தேதிவரை திறக்க அனுமதி இல்லை என்றே கூறப்படுகிறது.

Also Read: “10ம் வகுப்பு பொதுத்தேர்வு; கனவுகளை நசுக்கிட வேண்டாம்”: குழந்தைகள் நல ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்விகள்!