India

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80,000 கேட்டு பா.ஜ.க பிரமுகர் பேரம் : குஜராத்தில் கொடூரம்! #CoronaLockdown

ஊரடங்கால் பணி நிமித்தமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கடுமையாக அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய மோடி அரசு அறிவித்திருந்தது. இதற்கு கட்டணமும் விதிக்கப்பட்டது.

இந்த கட்டண விவகாரத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு இலவச பயண வசதி ஏற்படுத்தும் மோடி அரசுக்கு, ஊரடங்கால் வேலையின்றி, உணவில்லாமல் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற செயல் என விமர்சித்ததோடு, அவர்களின் பயணச் செலவை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் எனவும் அறிவித்தார்.

இதனையடுத்து, தொழிலாளர்களுக்கான பயணச் செலவில் 85% ரயில்வே அமைச்சகம் ஏற்கும் என மோடி அரசு தெரிவித்தது. இந்த நிலையில், குஜராத்தின் சூரத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு செல்ல முயற்சித்த தொழிலாளர்களிடம் பா.ஜ.க கவுன்சிலரின் சகோதரர் ரூ.80 ஆயிரம் வசூலித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த ஊரான உத்தர பிரதேசத்துக்கு செல்ல முடியாமல் குஜராத்தின் சூரத்திலேயே முடங்கிக் கிடந்திருக்கிறார்கள் தொழிலாளர்கள். அரசு அறிவிப்பை அடுத்து, வேலையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள் பா.ஜ.கவினர். அதன்படி, உத்தர பிரதேசம் செல்ல தான் ஏற்பாடு செய்வதாகக் கூறி பா.ஜ.க கவுன்சிலர் அமித் ராஜ்புத்தின் சகோதரர் அமர், புலம்பெயர் தொழிலாளர்களர்கள் 80 பேரிடம் தலா ரூ.1,000 வீதம் 80 ஆயிரம் ரூபாய் கேட்டு பேரம் பேசியிருக்கிறார்.

இதேபோல, குஜராத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு ரயிலில் வந்த பயணிகளிடமும் ரூ.630 கட்டணத்துக்கு பதில் 800 ரூபாயாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. எப்படியாவது சொந்த ஊருக்குச் சென்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டணத்தை செலுத்தியுள்ள தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவும் வழங்கியிருப்பது அவர்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

Also Read: “மோடி அரசின் நிர்வாக தோல்வி அம்பலம்” : 20 கோடி ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு உணவு நிவாரணம் சென்றடையாத அவலம்