India

“ஊரடங்கால் சிக்கிக்கொண்ட பெற்றோர்கள் - போலிஸார் தலைமையில் நடந்த திருமணம்” : மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த ஆதித்யா சிங் என்ற ஐ.டி ஊழியருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நேஹா குஷ்வாஹா என்ற மருத்துவருக்கும் பெற்றோர் திருமணத்தை நிச்சயித்து இருந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் பணியாற்றும் இரண்டு பேருக்கும் மே 2ம் தேதி டேராடூனில் திருமணத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலானதால் இரு வீட்டாரும் உத்தரகாண்டில் சிக்கிய நிலையில் மணமக்கள் மகாராஷ்டிராவில் சிக்கிக் கொண்டனர்.

இந்தச் சூழலில் முதலில் திருமணத்தை தள்ளி வைக்க ஏற்பாடு செய்த குடும்பத்தினர், பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலேயே இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தங்களது பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருமணம் செய்துவைக்க ஒப்புக்கொண்ட போலிஸார் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். பின்னர் இளம்ஜோடிகள் இருவருக்கும் புனே காவல்துறை துணை ஆணையர் சுகார் பவாசே தலைமையில் திருமணம் நடந்தது.

இந்தத் திருமணத்தில் காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பெற்றோர் ஸ்தானத்தில் செய்யவேண்டிய சம்பிரதாயங்களை போலிஸாரே முன்னின்று செய்தனர். திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்தனர்.

இந்த திருமணத்தை இருவீட்டாரும் காணொளிக் காட்சி மூலமாக கண்டு மகிழ்ந்தனர். மேலும் திருமணம் செய்துவைத்த போலிஸாருக்கு கண்ணீர் மல்க நன்றித் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read: “எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இது?” - மோடி அரசை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி!