India
மகாராஷ்டிரா முதல்வரிடம் பேசிவிட்டோம்; தமிழகதொழிலாளர்களை மீட்க அரசு ஏற்பாடு செய்தால் போதும்: மு.க.ஸ்டாலின்
“மகாராஷ்ட்ராவில் சிக்கித் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்களை அழைத்துவர, காலம் தாழ்த்தாது தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'ஒன்றிணைவோம் வா' செயல்திட்டத்தில், மகாராஷ்ட்ராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி ஆலோசனை மூலமாக, அவர்கள் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் என்பது தெரிந்தது.
இதுகுறித்து, மகாராஷ்ட்ரா முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே அவர்களிடம் தி.மு.க.,வின் தலைவர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் தெரிவித்தேன். கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும் மகாராஷ்ட்ரா முதலமைச்சரிடம் கலந்தாலோசித்துள்ளார்.
தமிழகத் தொழிலாளர்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப தங்களின் அரசு தயாராக இருக்கிறது என்று உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களிடமும் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் விவரத்தைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசும் சிறப்பு ரயில் மூலம் மகாராஷ்ட்ராவிலிருந்து தமிழகத்திற்குத் தொழிலாளர்களை அனுப்பத் தயாராக உள்ளது. தமிழக அரசுத் தரப்பிலிருந்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அந்தத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள்.
தமிழகத் தொழிலாளர்களை மகாராஷ்ட்ராவிலிருந்து திரும்ப அழைத்து வரவேண்டும் என்பது குறித்து பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் அழைத்துவர சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர். அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., அவர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.
தமிழக அரசு காலம் தாழ்த்தாது மத்திய அரசிடமும் மகாராஷ்ட்ரா மாநில அரசிடமும் தொடர்புகொண்டு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத் தொழிலாளர்களுக்கான பயணச் செலவிற்கான பொறுப்பினையும், அவர்களுக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விரைந்து மீட்டு, அழைத்து வருமாறு ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
-
தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் : தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !
-
“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !