India

“ஜூலை மாதத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள்” - யு.ஜி.சி அறிவுறுத்தல்!

கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்ட கல்லூரித் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என யு.ஜி.சி வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்தவும், அடுத்த கல்வி ஆண்டை தொடங்கவும் யு.ஜி.சி வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமிச்சர் ரமேஷ் போக்ரியால் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி தடைபட்ட செமஸ்டர் தேர்வுகளையும், இறுதி ஆண்டுத் தேர்வுகளையும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஒரு மாதத்தில் நடத்தி முடிக்கலாம். மேலும், ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்கலாம் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவோ, தேர்வு நேரத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்தோ நடத்திக் கொள்ளலாம். நேர்முகத் தேர்வுகளை ஸ்கைப் மூலம் நடத்தலாம்.

நிலைமை சீரடையத் தாமதமானால் 50% முந்தைய தேர்வு முடிவுகளின் படியும், 50% ஆசிரியர்களின் மதிப்பீட்டின் படியும் மதிப்பெண்கள் வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தை மாணவர்கள் கல்லூரிக்கு வந்ததாகக் கருத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read: தனிமைப்படுத்தப்பட்ட ‘பச்சை மண்டலம்’ - கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு கொரோனா பரிசோதனை! #Corona