India

“ஊரடங்கு எனும் தாழ் போட்டு தொழிலாளர்களை எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்?” - ப.சிதம்பரம் வேதனை!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலங்களில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

வேலை இன்றியும், சரிவர உணவின்றியும் தவித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டதால் பலநூறு கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்றதையும், அதனால் பலர் உயிரிழந்த கொடுமைகளும் அரங்கேறின.

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :

“நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும்.

வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாழ் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “அதிகார அத்துமீறல் வேண்டாம்; ஊடகத்தினரை சுதந்திரமாகச் செயல்பட விடுங்கள்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!