India

“கொரோனா காலத்திலும் விவசாயிகளின் மானியத்திலிருந்து ரூ.700 கோடியை பறித்த மோடி அரசு” : முத்தரசன் ஆவேசம்!

கொரோனா பாதிப்பால் விவசாயிகள் பெரும் துயரங்களை சந்திக்கும் வேளையில் உர மானியம் குறைப்பதை மத்திய அரசுகைவிடுவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானிய உதவியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. தற்போது கொரானா வைரஸ் நோய் தொற்று தடுப்புக்காக கடந்த மார்ச் 24, 2020 முதல் நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கோடை பருவத்தில் விற்பனை செய்த காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, வாழை, பலா, மலர்கள் என விவசாயிகள் சாகுபடி செய்த பலவகை பயிர்களும் விளைந்தும், அவைகளை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் நேற்று 22.04.2020 ஆம் தேதி புதுடில்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் விவசாயிகள் வாங்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற உரங்களுக்கான மானியத்தை வெட்டிக் குறைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு கிடைத்து வரும் மானியத்தில் சுமார் ரூபாய் 700 கோடியை பறித்துக் கொண்டுள்ளது.

நவ தாராளமயக் கொள்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்கொலை சாவுக்கு தள்ளப் பட்டிருக்கும் விவசாயிகள் மானியத்தை வெட்டியிருப்பது “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல“ வேதனை அளிப்பதாகும்.

எனவே, விவசாயிகளுக்கு வழங்கி வரும் உர மானியத்தை வெட்டிக் குறைக்காமல், தொடர்ந்து முழுமையாக வழங்க வேண்டும் என மத்திய அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கைவிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “விவசாயி மகனாக பெருமை கொள்ளும் எடப்பாடி வேதாந்தா, ONGC உரிமங்களை ரத்து செய்யாதது ஏன்?”: முத்தரசன் கேள்வி!