India

“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 377 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமானதைத் தொடர்ந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன்படி ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

யார் யாருக்கு அனுமதி ?

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.

கட்டுமானப்பணிகள் மற்றும் வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளும் தொடங்க அனுமதி.

50% தொழிலாளர்களுடன் தேயிலை, காபி தோட்டங்கள் இயங்க அனுமதி.

100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு அனுமதி.

நெடுஞ்சாலைகளில் உள்ள மெக்கானிக் ஷாப்புகள், தாபாக்கள் இயங்க அனுமதி.

33% ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் இயங்க அனுமதி.

தச்சுவேலை, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் போன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு அனுமதி.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்.

கொரியர் சேவைகள் தொடரலாம்.

யாருக்கு அனுமதி இல்லை ?

நாடுமுழுவதும் மதுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை.

பொது போக்குவரத்து சேவைகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், மால்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை.

அனைத்து வழிபாடு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது.

சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க தடை.

அதுமட்டுமின்றி, தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கவும்உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: 3 மணி நேரம் காத்திருந்தும் விற்க அனுமதிக்காமல் காவல்துறை அராஜகம் : ரோட்டில் காய்கறிகளை கொட்டிய விவசாயி!