India

அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து ‘சூடாக சமோசா’ கேட்ட நபர்... கிடைத்த பரிசு இதுதான்! #CoronaLockdown

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 1,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மக்களைக் காக்க அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறார்கள்.

கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய தேவை உள்ளோருக்கு உதவ அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தின் ராம்பூர் மாவட்ட அவசர உதவி எண்ணுக்கு இளைஞர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அவர், தனது வீட்டு முகவரிக்கு சூடான சமோசா கொண்டு வந்து தரும்படி கேட்டுள்ளார்.

அரசின் அவசர உதவி எண்ணுக்கு இதுபோன்ற தொல்லைகள் வருவது வாடிக்கை என்பதால் அவர்கள் அதை கொண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். ஆனால், அந்த நபர் தொடர்ச்சியாக பலமுறை அவசர உதவி எண்ணுக்கு அழைத்து சமோசா கேட்டு நச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஞ்சநேய குமார் சிங், போனில் சமோசா கேட்டு தொல்லை செய்த நபருக்கு பாடம் புகட்டும் விதமாக, அவரது வீட்டுக்கே சமோசாவுடன் நேரில் சென்றுள்ளார்.

பின்னர், அவசர உதவிக்காக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்ந்து அழைத்து தொல்லை செய்ததற்கு தண்டனையாக , அப்பகுதியில் தூய்மைப் பணி செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, தவறை உணர்ந்துகொண்ட அந்த நபர், இனிமேல் இதுபோல அரசு ஊழியர்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டேன் என வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ஹஜ் யாத்திரை செல்ல பல ஆண்டுகளாக சேமித்த ரூ. 5 லட்சத்தை கொரோனா நிவாரணமாக வழங்கிய மூதாட்டி! #CoronaRelief