India

ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள் - மத்திய அரசு எச்சரிக்கை! corona update

கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருவதால், அதன் பரவலை அடுத்த கட்டத்துக்கு அதாவது சமூக பரவல் அளவில் இட்டுச் செல்வதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், அரசு உத்தரவை பின்பற்றாமல் இளைஞர்கள் பலர் வெறிச்சோடியுள்ள பகுதிகளில் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளனர். இதனை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் உள்ள போலிஸார் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கியும், வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர். இதனையடுத்து, அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் வெளியே வருவதற்கு மாநில அரசுகள் பல்வேறு நேரக்கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாட்கள் அரசு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்கப்படுவார்கள் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோர் நேற்று இரவும் இன்றும் ஆலோசனை நடத்ததினர்.

அந்த ஆலோசனைக்குப் பின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களையும், வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிப்பவர்களையும் 14 நாட்கள் அரசு தனிமை முகாமில் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஊரடங்கை முழு வீச்சில் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிமாநிலத் தொழிலார்கள் ஓரிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு செல்வதைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தங்க இடம், உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகளில் அத்தியாவசியப் பணியாளர்களைத் தவிர யாரையும் அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனா ஊரடங்கில் கடைபிடிக்கவேண்டியவை - எந்தெந்த கடைகள் எவ்வளவு நேரம் செயல்படலாம்?” : அரசு அறிவிப்பு!