India

“EMI செலுத்த கால நீட்டிப்பு... கடனுக்கான வட்டி தள்ளுபடி” - மக்களின் கோரிக்கையை ஏற்குமா ரிசர்வ் வங்கி?

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வங்கியில் பெற்ற கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்துவதில் சில சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 596 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இன்று முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கடைபிடிக்கப்படும் இந்த 21 நாட்களில் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடும். தொழில் வர்த்தகம் முடங்கும் சூழல் ஏற்படும். இருப்பினும் சிரமத்தை தாங்கிக்கொண்டு, 21 நாட்களைக் கடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த 3 மாதங்களுக்கு எந்த ஏ.டி.எம் மையத்தில் சென்று பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படும். இதனால், பொதுமக்கள் தொழிலுக்காகவும், வாகனங்களுக்காகவும் பெற்ற கடனுக்கான மாதத் தவணையை எவ்வாறு செலுத்துவது என்றும் கவலையுடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில், வங்கியில் பெற்ற கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்துவதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி சில சலுகைகளை அறிவிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கியில் கடன் பெற்றவர்கள் தங்களின் மாதாந்திர தவணைத் தொகையை செலுத்தக் கால நீட்டிப்பு வழங்கப்படலாம், அல்லது கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவி்க்கின்றன.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர், “கடன் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். ஆதலால், சலுகைகள் தேவை என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியும் இதைக் கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஆன்லைன் டெலிவரி செய்யணும்னா இதை கடைபிடிங்க” - சென்னை பெருநகர மாநகராட்சி அறிவிப்பு!