India

“கொரோனாவால் இரண்டாவது பலியைச் சந்தித்த இந்தியா” : பேரிடர் நடவடிக்கையை துரிதப்படுத்த கோரிக்கை !

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 5,000த்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸ் கிருமி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் தற்போது வரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நேற்றைய தினம் கர்நாடகாவின் கல்புர்கியை சேர்ந்த முகமது ஹுசைன் சித்திக் என்ற 76 வயது முதியவர் உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனாவால் முதல் பலி என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். டெல்லியில் உயிரிழந்த மூதாட்டியின் மகன் சமீபத்தில் ஜப்பான், ஜெனிவா மற்றும் இத்தாலிக்கு சென்றுவந்துள்ளார்.

அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சோதித்துச் பார்க்கையில் 69 வயதான அவரின் அம்மாவிற்கு கொரோனா தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அதனால் உடல்நலம் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், டெல்லி ராம் மனோகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது தாயார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியா கொரோனாவால் இரண்டாவது பலியைச் சந்தித்துள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடராகக் கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Also Read: கொரோனாவால் இந்தியாவில் முதல் பலி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கர்நாடகா, தெலங்கானா மக்களுக்கு எச்சரிக்கை!