India

கேரளா வரும் பெண்களுக்காக பாதுகாப்பான தங்கும் விடுதி - பினராயி விஜயன் அரசு 'அசத்தல்' திட்டம்!

பெண்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் கேரள அரசு சார்பில் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும், உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு எடுக்கும் நடவடிக்கைகளை அப்போதே நடைமுறைப்படுத்தியும் வருகிறது கேரள அரசு. இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.

அந்த வகையில், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தேர்வு, பணி போன்றவற்றிற்காக கேரளாவுக்கு வரும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்கும் வகையில் தங்கும் இல்லம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு கட்டணமாக ஒரு நாளுக்கு 150 முதல் 250 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. உணவும் நியாயமான விலைக்கு தரமாகவும் வழங்கப்படுகிறது. இதன் முதல் விடுதி கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள KSRTC கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அதனை கடந்த சனிக்கிழமை அன்று சமூக நலத்துறை அமைச்சர் ஷைலஜா திறந்து வைத்தார். இதுபோன்று பெண்களுக்கான பாதுகாப்பான தங்கும் விடுதி விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளை உடன் அழைத்து வரும் பெண்களும் இந்த தங்கும் விடுதிகளில் தங்கிக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு வெளிமாநில பெண்கள் மத்தியிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

Also Read: சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடம் அளிக்க கேரள அரசின் அசத்தல் திட்டம்!